Sunday, July 24, 2011

மனிதம் மரத்த மர(ரு)த்துவர்கள்

மனிதம் மரத்த மர(ரு)த்துவர்கள்.

இது எனக்கு ஏற்பட்ட ஒரு கொடிய அனுபவம். இனி ஒருவருக்குக் கூட, இந்தக்கொடுமை நிகழக்கூடாதென்பதே என் விருப்பம். மருத்துவ தொழிலின் மகத்துவம் அறிந்தவன்தான் நானும். எனினும், சிலமனிதம் மறந்த மருத்துவர்கள் செய்யும் கொடுமைகள் சொல்லாமல் தீராது.

கடந்த ஐந்து நாட்களாக என் அன்னை நோய்வாய்ப்பட்டு, நெல்லையிலுள்ள, எனக்கு மிகவும் வேண்டப்பட்ட மருத்துவரின் மருத்துவ மனையில், சிகிச்சை பெற்றுவருகிறார். என் அன்னைக்கு வயது எண்பதை நெருங்குகிறது.

அந்தக் கால உடம்பு. அறுபது வயது வரை, ஓடியாடி உழைத்ததினாலோ என்னவோ, எழுபதின் தொடக்கம்வரை, வாழ்க்கைத்துணை சொல்லும் வார்த்தைகளை மட்டுமே மந்திரச்சொல்லாய் மதித்து, என் தந்தைக்கு ஓடியாடித் துணையாயிருந்தவர். தனக்குத் தலைவலி, காய்ச்சல் என்று என் தாய் சொல்லி நான் கேட்டதில்லை.

ஐம்பது வருடங்களுக்கும் மேலாய், மனமொத்த தம்பதியராய் மணவாழ்க்கை வாழ்ந்த என் தந்தை, எண்பத்தியோரு வயதில், எழுபத்தியோரு வயதான என் அன்னையை மறந்து, விண்ணுலகம் சென்ற நாளில், என் அன்னை அழுத அழுகையினை வெறும் வார்த்தைகளால் விளங்க வைக்க இயலாது. அன்று தொடங்கியது என் அன்னையின் உடல்நல பாதிப்புகள்.

பிரிந்து சென்ற தன் உயிரை நினைத்து, உணவை வெறுத்து, உறக்கம் துறந்த நாட்களை எண்ணிவிட இயலாது. சிறிது சிறிதாய், நோய்கள் அவளை நோக்கி வந்தன. அவ்வப்போது உடல்நலக்கோளாறுகள் வந்து சென்றாலும், அன்பு மகன்களையும், அவர்கள் பெற்றெடுத்த பேரக்குழந்தைகளையும் பார்த்துத் தன் உடல்நலக்கோளாறுகளை உதறி வந்தாள். உடல் நலம் தேறி வந்தாள். வீட்டிற்குள் மட்டும் நடமாடி வந்தாள்.

கடந்த திங்களன்று, வலது காலை எடுத்து வைக்க வரவில்லையென்று வருத்தப்பட்டார். அவசர சிகிச்சைக்கென மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். உணவை உண்ண முடியாமல், ஒவ்வொரு நாளும் அவஸ்த்தை. எழுந்து சென்று, இயற்கை உபாதைகளை கழிக்க முடியாதென்பதால், சிறுநீரை வெளியேற்ற 'யூரோ பேக்'.

இத்தனை அவஸ்தைகளுக்கு நடுவில், மூளையில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு உள்ளதா என்று பார்க்க, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க மருத்துவர் பரிந்துரைத்தார். கூடவே, வயிற்றுப் பகுதியிலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து வந்தால், நல்லதென்றார். பிற்பகல் மூன்று மணியிலிருந்தே, சிகிச்சை எடுத்த மருத்துவ மனையிலிருந்து,நெல்லையின் பேர் சொல்லும் நதியின் பெயர் கொண்ட ஸ்கேன் சென்டரைத் தொடர்பு கொண்டதில், ஆறு மணிக்குத்தான் அப்பாயின்மென்ட் என்றனர்.

ஆறு மணிக்கு ஆம்புலன்ஸூம் வந்தது. ஸ்கேன் எடுக்க இடையூறாய் இருக்குமென்பதால், சிறுநீர் வெளியேறி வந்த சிறு குழாயினையும் அடைத்து வைத்தனர். ஸ்கேன் சென்டர் சென்றவுடன், பணம் பெற்றுக்கொள்ள பல்லிளித்தனர். பணம் செலுத்திய பின்னர், அவர்களின் நடவடிக்கைகளில் நல்லதொரு மாற்றம் கண்டேன். அவசரமாய்ப் புறப்பட்டு ஸ்கேன் சென்டரை அடைந்தவுடன், அரை மணி நேரத்தில், ஒரு லிட்டர் தண்ணீரை அருந்தி, சிறுநீரகங்கள் தாங்குமளவிற்கு பொறுத்து இருந்தால் மட்டுமே, சரியாக ஸ்கேன் எடுக்க முடியுமென்றனர். அரைமணியென்று சொன்னவர்கள், மூன்று மணி நேரம் முழுதாய் சென்ற பின்னரும் ஸ்கேன் எடுக்க அழைத்த பாடாயில்லை. ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் என் அன்னை.

அந்த ஸ்கேன் சென்டரில் அத்தனை வசதி. காற்றோட்டம் என்பது கானல் நீர் போல் இருந்தது. மூன்று பக்கம், கான்க்ரீட் சுவர்கள். முன்பக்கம், கண்ணாடித் தடுப்பு. ஓடிக்கொண்டிருந்த மின் விசிறிகளையும், தியேட்டரில் படம் போட்டவுடன், மின் விசிறிகளை அணைத்து விடுவது போல், சென்று சில நேரம் கழித்தவுடன், ஓய்வு கொடுத்தே வைத்திருந்தனர். அப்படி புழுங்கிக்கொண்டிருந்த அறையினில், சுமார் ஐம்பது பேர்கள் காத்திருந்தனர்.

ஏன் காலதாமதமாகிறது என்று கேட்டால், இதோ அடுத்து உங்களுக்குத்தான் எடுக்கப்போகிறோம் என்று போக்கு காட்டி வந்தனர். அதிகளவில் தண்ணீர் அருந்தியதால், என் அன்னைக்கு, சிறு நீர் கழிக்க முடியாமல் அவஸ்த்தை ஒருபுறம். நேரம் செல்ல செல்ல, பசி வந்து பட்ட அவஸ்த்தைகள் மறுபுறம். எங்களை இந்த சென்டருக்கு அனுப்பி வைத்த மருத்துவருக்கு(அவரும் என் உற்ற நண்பர்தான்), தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன். அவரும், சென்டரை தொடர்பு கொண்டு உடனே ஸ்கேன் முடித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தினார். ஸ்கேன் சென்டர் வைத்திருப்பவர்கள், அருகிலுள்ள மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்பதால், அந்த மாவட்டத்தில் அரசுத் துறையில் பணிபுரியும் என் மருத்துவ நண்பர் ஒருவர் மூலமும், ஸ்கேன் சென்டர் மருத்துவரிடம் சொல்ல சொன்னேன்.

வந்து சிக்கி விட்டார்கள், ஸ்கேன் எடுத்து விட்டுத்தானே செல்ல வேண்டும் என்ற உதாசீனம் அவர்களிடம். எண்பது வயதை நெருங்கும் என் அன்னை அடைந்த துன்பங்கள் அப்பப்பா! ஸ்கேன் மெஷினில் கோளாறாம். ஒவ்வொரு நபரையும், ஒரு முறைக்கு பல முறை அழைத்து ஸ்கேன் எடுத்துக கொண்டிருந்தனர். காத்துக்கிடப்பவர்கள் காத்தே கிடந்தனர். அதனை சரி செய்ய, வல்லுநர் எவரும் அழைக்கபடாமலே, அங்கிருந்த மருத்துவ நிபுணர்களே(!), இயந்திரங்களுடன் மல்லாடிக்கொண்டிருன்தனர்.

எனக்கு தெரிந்த மருத்துவர்கள் இருவர், விரைவில் அனுப்பி வைக்க பரிந்துரை செய்ததினால்தானோ என்னவோ, இரவு பத்து மணிக்கு, எங்கள் முறை வந்தது. முக்கால் மணி நேரத்தில், ஸ்கேன் முடித்து வெளியில் வந்தால், அங்கிருந்த ஆம்புலன்சில் ஏறி, பணியிலிருந்த மருத்துவர் பறந்து விட்டார். அவர் ஆம்புலன்சில் ஏறச் செல்லும்போதே, அன்னையின் நிலையினைக் கூறி, மருத்துவரை மாற்று வாகனத்தில் அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டேன்.

மருத்துவரல்ல அவர் மனிதம் மரத்துப் போனவர் என்று நான் அறிந்து கொண்டேன். சென்ற வாகனம் அரைமணி நேரம் திரும்பவில்லை. அந்த இரவு வேளையில், அடுத்த ஆம்புலன்ஸ் வரவைக்கவும் முடியாமல், ஆட்டோவில் ஏற்றி செல்ல, அன்னையின் உடல்நிலை ஒத்துழைக்காததினாலும், பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. விசாரித்ததில், வீட்டுக்கு செல்லும் வழியில், மருத்துவர் தன மனைவி, மக்களுக்கு ஷாப்பிங் முடித்து சென்றதில், சுணக்கம் என்றார் ஓட்டுனர்.

அந்த ஸ்கேன் சென்டரின் உரிமையாளரும் ஒரு மருத்துவர்தான்.அவரிடம் சென்று முறையிட்டேன். 'இப்ப வந்திரும்' என்ற இரு வார்த்தைகள் மட்டுமே இயந்திரத்தனமாய் வந்து விழுந்தது அவர் வாயிலிருந்து. செவிடன் காதில் ஊதிய சங்கென்று, என்னை நானே நொந்துகொண்டு, வந்து சேர்ந்த ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன் என் அன்னையை.

1 . மருத்துவமனையில் ள்நோயாளிகளாய் இருப்பவர்களை அழைத்து வரும் போது, இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப, சரியான நேரத்திற்கு அழைத்து வரலாம். அதிலும், நோய்வாய் பட்ட, வயதானவர்கள் என்றால் அதிக கவனம் எடுத்து காக்க வைக்காது இருந்திருக்கலாம்.

2 .மருத்துவர்களை விட, நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம்.

3.அந்த மர(ரு)த்துவரை, ஒரு காரிலோ, ஆட்டோவிலோ வீட்டிற்கு அனுப்பிருக்கலாம்.

4. அவசர அவசரமாய் ஆம்புலன்சில் ஏறிப்பறந்த மர(ரு)த்துவர், நோயாளியின் நிலையை சற்றே சிந்தித்து பார்த்திருக்கலாம்.

டிஸ்கி: வாய் விட்டு புலம்பிய பின்னரும், காது கொடுத்து கேட்காத அந்த மருத்துவர்கள் மீது, நுகர்வோர் சேவை குறை பாட்டின் கீழ் குற்றச்சாட்டு செய்ய முயற்சிகள் தொடங்கிவிட்டேன்

No comments:

Post a Comment